சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

சனி, 2 நவம்பர், 2013

கல்விச் சுதந்திரம் எங்கே?



பள்ளிகள் தொடங்கி விட்டன. புத்தம் புதிய மலர்களைப் போல குழந்தைகள் புதிய நம்பிக்கையுடன் பள்ளி செல்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்குமே கோடை விடுமுறை கழிந்து பள்ளி திறக்கும் நாளில்தான் அவர்களுக்குப் புதிய ஆண்டு தொடங்குகிறது. அந்த நாளில்தான் ஒரு வயது அதிகரிக்கிற உணர்வும் ஏற்படுகிறது. அடுத்த வகுப்பு, புதிய வகுப்பறை, புதிய ஆசிரியர்கள், புதிய பாடங்கள் என அச்சடித்த புதிய புத்தகங்களின் வாசனையைப் போல அவர்களுக்குப் புதிய ஆண்டு தொடங்குகிறது. ஆனால், அவர்கள்தாம் நவீன கல்வி வியாபாரத்தின் பகடைக்காய்கள் என்பதையோ, அவர்களைச் சுற்றித்தான் நவீன சதுரங்கம் ஆடப்படுகிறது என்பதையோ அவர்கள் அறிவதில்லை..

அப்பணசாமி

ற்போது ஆரம்பக் கல்வி மீது நான்குமுனைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் மீது தமிழக அரசே இரு முனைத் தாக்குதல்கள் தொடுத்துள்ளது.  முதலாவது தாக்குதல் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கில மொழி வழிக் கல்வி தொடங்கப்படுகிறது என்ற அறிவிப்பு. இரண்டாவது அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை 252.
இந்த இரண்டு அறிவிப்புகளுமே மேலோட்டமாகப் பார்க்கப்படும் போது நல்லதுதானே! அப்போதானே கல்வியின் தரம் உயரும் என எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இது போன்ற சிந்தனைகள் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து குறிப்பாக இரண்டாம் தலைமுறைப் பட்டதாரிகளை உருவாக்கும் சூழலில் உள்ள நகர்ப்புறவாசிகளிடமிருந்தே தோன்றுகிறது. கல்வி குறித்த விவாதம் என்பது நகர்ப்புறத்து மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. அது கிராமப்புற மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எனவே. அரசின் இந்த இரண்டு முடிவுகள் குறித்து விவாதிக்கப் புகும் முன் ஊரகப் பகுதிகளில் தொடக்கக் கல்வி குறித்த நிலைகளை நாம் பார்க்கலாம்.
நாடு சுதந்தரமடைந்த போது தமிழ்நாட்டில் இருந்த பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 8000க்குள்தான். அதுவும் கிராமப்புறங்களில் பள்ளிகளைப் பார்ப்பது மிகவும் அரிது. ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில்தான் குலக்கல்வி முறை புகுத்தப்பட்டது; புதிய பள்ளிகள் திறக்கப்படவில்லை. அடுத்து காமராஜர் ஆட்சியில் 1954 முதல் 1963 வரையான ஒன்பது ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. அதுவும் அப்போது பற்றாக்குறையாகத்தான் பார்க்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 50 ஆண்டு காலத்தில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில்தான் சில ஆயிரம்  பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 2001& 2006 காலகட்டத்தில் மட்டும் 4.064 பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதுவும்கூட புத்தாயிரம் ஆண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதன் பலனாக.
அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகள் அடிப்படை வசதிகளை ஏழைகளுக்கு அளிப்பதில் பின் தங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஐ.நா, 2015 க்குள் நிறைவு செய்ய எட்டு இலக்குகளை நிர்ணயித்தது. அனைவருக்கும் கல்வி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள் மீதான பாகுபாடு நீக்கம் உள்ளிட்ட ஐந்து இலக்குகள் ஆரம்பக் கல்வி தொடர்பாக வருவதால் இந்தியா தனது மானத்தைக் காப்பாற்றக் கொண்டுவந்த சர்வ சிக்ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமாவக் சிக்ஷ அபியான் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் வரவால்தான் இந்தியாவில் தொடக்கக் கல்வி மீண்டும் புத்துயிர் பெற்றது. அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப் பள்ளி என்பது எஸ்.எஸ்.ஏ.யின் இலக்கு. இத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
தமிழகத்தில் அறியப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் 64846&ல் இன்னமும் ஆரம்பப்பள்ளிகள் கூட இல்லாத குடியிருப்புப் பகுதிகள் (பெரும்பாலும் குக்கிராமங்கள்) சுமார் 300 தான். இருந்தாலும் இன்னமும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாக நீடிப்பது ஆயிரக்கணக்கில் தொடர்கின்றன. குறிப்பாக, இன்னமும் ஐந்து விழுக்காடுப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. இவற்றில் குக்கிராமங்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளை எடுத்துக்கொண்டால் இந்த விகிதாசாரம் பல மடங்குகள் அதிகரிக்கும் என்பதை அழுத்திக் கூற வேண்டும்.

தவிரவும், ஊரகப் பகுதிகளில் பெரும்பாலும் ஈராசிரியர் பள்ளிகள்தாம் அதிகமாக உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளின் சராசரி ஆசிரியர் விகிதம் 2.7% என்று அந்த ஆய்வு கூறுகிறது. இன்னமும் கரும்பலகை கூட இல்லாத தொடக்கப் பள்ளிகள் 3% உள்ளன. அதேசமயம், 50 மாணவர்களுக்கும் குறைவான சேர்க்கை கொண்ட பகுதிகள் 35%க்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வகுப்பறைகளில் ஆடு& மாடுகளைப் போல நூற்றுக்கும் அதிகமான மாணவர்களை அடைத்துப் போடும் உயர்நிலைப்பள்ளிகள் 2.6%&ம், நடுநிலைப் பள்ளிகள் 2.5%&ம் உள்ளன.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் வகுப்பறைகளுக்கு அழைத்து வருவதற்கு மாநில அரசு படாத பாடு பட்டு வருவது அறிந்ததுதான். இதிலும் ஊக்கம் போதாததாக இருப்பதால் இன்னமும் 6% குழந்தைகள் உரிய பருவத்தில் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளனர். 2005&2006 கணக்கெடுப்பின்படி அடுத்த ஆண்டில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,11,989ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. (6&14 வயதுக்குட்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,00,08,000.) ஆண் மாணவர் சேர்க்கையை விட பெண் மாணவர் சேர்க்கை அனைத்து நிலைப் பள்ளிகளிலும் 1.3% முதல் 3.3% வரை குறைவாக உள்ளது.
இதனால் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளைக் கண்டுபிடுத்து அவர்கள் பள்ளி செல்வது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் பள்ளியில் பாதியிலே இடை நிற்பது இன்னமும் நீடிக்கிறது. குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு இடப்பெயர்வு (27,497 குழந்தைகள்), வீட்டுப் பராமரிப்பு ( 21,478 குழந்தைகள்), குழந்தைத் தொழிலாளர்கள் (24,411 குழந்தைகள்) முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. குடும்ப உறுப்பினர் மரணம், உடல்நலமின்மை, வறுமை போன்றவை குழந்தைகளைப் பள்ளிகளை விட்டே துரத்துகின்றன. இதனால் பள்ளிகளில் சேர்க்கப்பட்டாலும் மேற்கூறிய காரணங்களால் குழந்தைகள் இடை நிற்க நேர்கிறது.


தொடக்கப் பள்ளிகளில் இடை நிற்றல் விகிதம் 3.8% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டாலும் உயர்நிலைப்பள்ளிகளில் 7.58% ஆக அதிகரித்தே உள்ளது. வறுமையின் கோரப் பிடியில் சிக்கும் குடும்பங்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்கள் மற்றும் சிறப்புக் கவனம் கோரும் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் அந்த அவலத்தின் குவி மையமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
பள்ளி சேராக் குழந்தைகள் மற்றும் இடை நிற்றலைப் பொறுத்தவரை வட மாநிலங்களை விட தமிழகத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையே நிலவுகிறது. இவை மிகக் குறைந்த எண்ணிக்கை என்பதால் அலட்சியமாக விட்டு விடவும் முடியாது. எழுத்தறிவிக்க ஆங்கொருவன் இல்லையானால் அச் சமூகம் அவமானத்துக்குரியதுதான். இப் பிரச்சனையைப் பொறுத்தவரை கேரளா, கோவா, இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவை தமிழகத்தைவிட முன்னிலையில் உள்ளதைக் கவனிக்க வேண்டும்.
6&14 வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளுக்கு வரவழைப்பதில் தமிழக அரசு 99 சதவீதத்துக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. மதிய உணவுத் திட்டத்தை  விரிவுபடுத்துதல், இலவச நோட்டு& புத்தங்கள், இலவசச் சீருடை, இலவசக் காலணி, பை ஆகிய திட்டங்கள் இதற்குப் பெரும் உதவி செய்துள்ளன. அவர்களை மேனிலைப் பள்ளி வரை கொண்டு வர இலவச சைக்கிள், இலவச மடிக் கணினி ஆகிய திட்டங்கள் உதவி செய்கின்றன.
ஆனால்..
போதுமான ஆசிரியர்கள் நியமனம், போதுமான வகுப்பறைகள், பள்ளிக் கட்டடங்கள் பழுது பார்த்தல், அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்& பெண் என தனித் தனிக் கழிவறைகள், கரும்பலகை உள்ளிட்ட கற்றல் & கற்பித்தல் கருவிகள், சமையல் கூடம் போன்ற வசதிகள் மற்றும் சேவைகளை அளிப்பதில் மிகவும் பின்னடைந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. கட்டடமே இல்லாமல் இயங்கும் பள்ளிகள் இன்னமும் உள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது.
சத்துணவு போடுவதும், புத்தகங்கள் வழங்குவதும் மட்டும் கல்வி அளிக்காது. போதுமான ஆசிரியர்களுடன் உரிய வசதிகளும், கல்விச் சேவைகளும் இணைந்தே வழங்கப்படும் போதுதான் அக் கல்வி பயனுள்ளதாகவும், அக் குழந்தைகளை மேனிலைக் கல்விக்குத் தயார்ப்படுத்துவதாகவும் அமையும்.

அடிப்படைக் கல்வியைப் பொறுத்தவரை பால் வேறுபாடு காணப்படுவதில்லை. ஆனால். சாதி இந்துக்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஆரம்பப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவுக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. பெயரளவுக்குப் பதிவேடுகளில் அவர்கள் பெயரைப் பதிவு செய்து விட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். அக் குழந்தைகள் தங்கள் சேரியில் உள்ள சத்துணவு மையத்தில் மட்டுமே பொழுதைக் கழிக்க நேர்கிறது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அடிப்படைக் கல்வியின் நிலை இவ்வாறு இருக்கிறது. அடுத்து மேலும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்:
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சர்வேயில் அங்குள்ள ஊரகப் பகுதிகளில் 87% மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் 13% மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் பயிலுகின்றனர். அரசுப் பள்ளிகளில் சத்துணவு, புத்தகம், சீருடை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டாலும் தனியார் பள்ளிகளே சிறப்பாகச் செயல்படுவதாகவும், தங்களிடம் பொருளாதார வசதி இல்லாததால்தான் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான அணுகல் நகல் அறிக்கை (2006) இவ்வாறு கூறுகிறது: ‘‘அரசுப் பள்ளிகளுக்கான கட்டணம் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டால் அவர்கள் தனியார் பள்ளிகளை மட்டுமேதான் தேர்வு செய்வார்கள். இது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும் சலுகைகளைக் கேள்விக்குறியாக்குகிறது. ஏனென்றால், அரசுப் பள்ளிகளில் படித்தால் தங்கள் குழந்தைகள் கற்றல் திறன் குறைந்தவர்களாகி விடுவர், அதனால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என எண்ணுகின்றனர்.’’
அண்மையில்கூட, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் சட்டமன்றத்தில் பேசும்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது குறைந்து வருகிறது. குறிப்பாக நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5% வரை குறைந்துள்ளது.
அதாவது, அடிப்படையில் சமத்துவம் நிலவ பொதுப்பாடத் திட்டம் அமலில் உள்ள நிலைமையில் கூட மக்கள் தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் அங்கு அடிப்படை வசதிகளும், போதுமான ஆசிரியர்களும் உரிய கண்காணிப்பும் இல்லாததுதான்.
இந்த வெளிச்சத்தில் மத்திய& மாநில அரசுகளின் நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.
முன்னர் குறிப்பிட்டதைப் போல, மாநிலக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் சட்ட மன்றத்தில் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் மீதான் விவாதத்துக்குப் பதிலளிக்கையில் கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவித்தார்.
அரசு கொள்கையில் இடம் பெறாமல், ஆளுநர் உரை, பட்ஜெட்டில் இடம் பெறாமல் அமைச்சர் மானியக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போது அறிவித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்த ஆங்கில வழிக் கல்விதான் ஒரே வழி என இந்த அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை கூறுபவர் யார் என்றே தெரியவில்லை.
உலகில் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ள அனைத்து வல்லுனர்களுமே தாய் மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள். அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது. இதுவரை பெரும் சாதனை படைத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்தவர்கள், தத்துவவாதிகள் மற்றும் சிறந்த நிர்வாகிகள் அனைவருமே தாய் மொழி வழிக் கல்வி பயின்றவர்கள்தாம் என்பதை உதாரணங்களுடன் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், கல்விக்காக இதுவரை அமைக்கப்பட்ட அனைத்துக் கமிஷன்களும் & கோத்தாரி கமிஷன், யஷ்பால் கமிஷன் முதல் முத்துக்குமரன் கமிஷன் வரை & அனைவருக்குமான கட்டாயக் கல்விச் சட்டம் உள்பட தாய்மொழி வழிக் கல்விக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
இதையும் மீறி ஒரு மாற்று மொழியை வலுக்கட்டாயமாகப் புகுத்துவது சந்தேகங்களையே உருவாக்குகிறது. குறிப்பாக, ஆங்கில மொழியை இவர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள்? இவர்கள் மொழிக் கல்வியையும் பயிற்று மொழியையும் இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். அதுவும் இன்றைய நவீன உலகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியைக் கற்பது அவசியம். அதுவும் வல்லாதிக்கம் செலுத்தும் ஏகாபத்திய மொழிகளில் பயிற்சி பெறுவது மிகவும் அவசியமாகவும் கூட இருக்கலாம். அது ஆங்கிலம் மட்டுமல்ல; சீனம், கொரியா, ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பயிற்சி பெறுவது இன்னமும் பலனிக்கக் கூடியது. ஆனால் அறிவியல், கணிதம், புவியியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களைத் தாய் மொழியில் பயிலாமல் எவ்வாறு விளங்கிக் கொள்வது? அப்படியே ஆங்கிலத்தில் கற்றுத் தர ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார்களா? அவர்களுமே தாய் மொழி மூலமாகத்தான் தங்கள் பாடங்களை உணர்ந்திருப்பார்கள் என்பதையும் காணத் தவறக்கூடாது.
கிராமப்புறப் பள்ளிகளின் நிலை, மாணவர்களின் நிலை ஆகியவற்றைப் பார்த்தோம். அக் குழந்தைகளிடம் ஆங்கிலத்தைத் திணிப்பது எத்தகைய வன்முறையாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அங்கு கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமானால் தேவையான வகுப்பறைகள், கரும்பலகைகள், ஆசிரியர்கள், கழிவறைகள் இவைதாம் தேவை. அத்துடன் குழந்தைகளின் ஆங்கில அறிவும் வளர வேண்டுமென விரும்பினால் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற மொழி ஆசிரியர்களும் தேவை. அவர்கள் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆற்றலுடன் பிற பாடங்களைத் தாய் மொழியில் கற்பிப்பவராகவும் இருக்கலாம்.
தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான மொழிக் கல்வி அளிக்க வேண்டும். அதற்காக ஆரம்பக் கல்விக் கொள்கையில் மொழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதில் தெளிவு இல்லாததால் நாம் இரண்டு மொழிகளையும் இழந்து வருகிறோம். நமது சமுதாயம் தமிழும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் ‘தங்கிலீஷ்‘ சமுதாயமாகி வருகிறது.
ஆனால், இது போன்ற ஆலோசனைகளை எளிதாக விட்டு விட முடியாது. உலமயமாக்கல் தொடக்கக் கல்வித் துறையைக் கொத்திக் குதறத் தயாராக இருக்கிறது. நாடு முழுவதும் பயிற்று மொழி ஆங்கிலம் என ஆகிவிட்டால் அதற்கு வேலை இன்னும் எளிதாகி விடும். அப்புறம் இருக்கவே இருக்கிறது செயற்கைக்கோள் தொழில்நுட்பம். வகுப்பறைகள் வேண்டாம். ஆசிரியர்கள் வேண்டாம். ஒரு குறு வட்டை ஓட விட்டால் போதும், ஆசிரியரே இல்லாமல் கற்கலாம் என்பார்கள். தாய்மொழியை முற்றிலும் இல்லாமல் ஒழிக்க இதைவிட வேறென்ன வேண்டும்?
அடுத்ததாக, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை 252 ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அந்த ஆணையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் தேர்வு பெறுபவர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுய நிதிப் பள்ளிகள் அனைத்தும் இதன்படியே தமது ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளும்.
இதற்குக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனென்றால், இந்த முறையில் இட ஒதுக்கீடு பின் பற்றப்படவில்லை. இதனால் சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.  ஆனால், பள்ளிக் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்கிறது அரசு. மீண்டும் தரத்தின் பெயரால்தான் இதுவும் நடக்கிறது.
கல்வியின் தரம் நன்றாக இருக்க வேண்டுமானால் அதன் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு அவசியம் தானே! கல்லூரி ஆசியர்களுக்கு இதுபோல நெட், ஸ்லெட் ஆகிய தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகிறதே!! அதுபோல பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு வைத்தால் என்ன தவறு என்கிறார்கள்.
அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழு (என்.சி.டி.ஈ) உருவாக்கப்பட்டுக் கல்வி ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டது. அது கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் (முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கல்லூரி ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படுவதால்) ஆசிரியப் பணிக்கான தகுதி இருக்கிறதா என்பதை அறிய யு.ஜி.சி. யின் கீழுள்ள கல்லூரிகளுக்கு நெட் தேர்வும், மாநில அரசுக் கல்லூரிகளுக்கு ஸ்லெட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை என்.சி.டி.ஈ. உருவாக்கி அதன்படி கல்லூரி ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது.
ஆனால், பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்றால் பிளஸ் டூ உடன் ஆசிரியக் கல்லூரி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் என்றால் பட்டப்படிப்புடன் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) தேர்ச்சி பெற்றிருப்பதும் அடிப்படைத் தகுதி ஆகும். அதாவது அடிப்படைத் தகுதியிலேயே கல்வியியல் படிப்பும் இணைக்கப்பட்ட பின் அதில் தேர்ச்சி பெற்ற பின் மீண்டும் ஏன் தகுதித் தேர்வு என கல்வியாளர்கள் கேட்கிறார்கள். 
கல்லூரி ஆசிரியர் போன்றே பள்ளி ஆசிரியருக்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று கருதினால் நெட், ஸ்லெட் தேர்வுகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது போல ஆசிரியத் தகுதித் தேர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டாமா எனக் கேட்கிறார்கள்.



இதனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன வகுப்பினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் மீண்டும் இதர பிரிவினருக்குச் செல்லும் அபாயம் இருப்பதால் தகுதித் தேர்வு முறையைக் கைவிட வேண்டும்; அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்; நிரப்பப்படாமல் பின்னடைவுப் பணியிடங்களாக உள்ள பனியிடங்களை அந்தந்தப் பிரிவினருக்கே வழங்கும் வகையில் சிறப்பு நியமனம் செய்யப்பட வேண்டும் எனக் கல்வியாளர்களும், தலித் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதற்கு அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இவர், தமிழ்நாட்டில் பொதுப் பள்ளி முறையே சிறந்தது எனக் கடுமையான மேன்மையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலர் ஆவார்.
அரசுப் பணியிடங்களில் சமூக நீதியை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 ஆகியவை உறுதி செய்கின்றன. பல நீதி மன்றத் தீர்ப்புகளும் இதை வலியுறுத்துகின்றன. சமூக நீதிக்கான முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதே தமிழகம் அளித்த கொடையால்தான். சமூக நீதிக்கான போராட்டம் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டது. அதில் பல கட்ட வெற்றிகள் பெற்று இன்று இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. தற்போதைய முதல்வரே சமூக நீதி காத்த வீராங்கனை எனக் கவுரவிக்கப்பட்டவர்.
இந்த ஒரு குழு அளித்த அறிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டை நிராகரிப்பது நியாயமா? என்கிறார்கள்.
இன்று கல்வித் துறையில் கொண்டு வரப்படும் எந்த ஒரு நடவடிக்கையானாலும் மத்திய அரசு கொண்டு வந்து அமலில் உள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்துடன் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது.



உண்மையில், இச்சட்டம் நல்லதா? அல்லது கெட்ட சட்டமா? என்று கேட்கத் தக்க அளவில்தான் இருப்பதாகப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகிறார்.

மத்திய அரசு நிறைவேற்றிய இச் சட்டம் அமலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதன் கீழும் தமிழக அரசும் விதிகளை இயற்றி ஓராண்டாக அமலில் உள்ளது.
இதில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவோ, அருகமைப் பள்ளி முறையைக் கறாராக அமல்படுத்தவோ, தாய் மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவோ, கல்வியாளர்கள் பெரிதும் வலியுறுத்தும் குழந்தைகளின் கற்பனைக்கும் படைப்பூக்கத்தும் வடிகால் அமைக்கவோ தெளிவான நிபந்தனைகள் இல்லை என்கிறார்கள், கல்வியாளர்கள்.
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள்தாம் (ஆண்டு வருமானம் ரூ. 2 இலட்சத்துக்கும் கீழ்) பயன் பெறுகின்றனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வீட்டுக் குழந்தைகள் இந்த இட ஒதுக்கீட்டுப் பலனை அடைய முடியவில்லை எனப் புலம்புகிறார்கள் பெற்றோர். மேலும், இந்த இட ஒதுக்கீடு சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் 80% சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்தாம் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கடந்த 2012 ஜூலை 2 அன்று வழங்கிய தீர்ப்பில் ‘கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு இருப்பிடத்தில் இரண்டு பள்ளிகள் இருந்தால் எந்தப் பள்ளியில் சேர்க்க முடியும் என்பதில் தெளிவு இல்லை. தாம் விரும்பும் பள்ளியில் சேரும் உரிமை முதலில் அக் குழந்தைக்கு இருக்க வேண்டும்‘ என்றார்.
மேலும், கல்வியில் தனியார்மயத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவுகள் இச் சட்டத்தில் வலுவாக இல்லை என்கிறார் பிரின்ஸ். ‘‘(மாநில)‘அரசு எவ்வகையில் விரும்புகிறதோ அவ்வகையில் அனைவருக்குமான கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியை அரசு விரும்புகிற வகையில் விரும்புகிற சட்டத்தின் மூலம் அமல்படுத்தலாம்’ என சட்டம் கூறுகிறது. மாநில அரசு எவ்வாறு விரும்புகிறதோ அந்த வகையில் என்றால், அரசு தனியார் கூட்டைத்தான் விரும்பும்’’ என்கிறார்.
பொதுப்பள்ளிகளின் சிறப்பை அரசு உணரவில்லை என்பதையே இதன் மூலம் உணர முடிகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் அரசு எதை வேண்டுமானாலும் தனியாருக்கு அனுமதிக்கும். ஆனால், தொடக்கக் கல்வியை மட்டும் தன் கண்காணிப்பில் வைத்து இமை போலக் காக்கும். உதாரணமாக, அமெரிக்காவில் தொடக்கக் கல்விக்கான முழுச் செலவையும் அரசு மட்டுமே ஏற்கிறது. 
கனடாவை எடுத்துக்கொண்டால், ஒரு பகுதியைச் சேர்ந்த மாணவன் வேறு பகுதியில் உள்ள பள்ளியில் சேருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அங்கு அருகமைப் பள்ளி முறை கறாராக கடைப்பிடிக்கப்படுகிறது. பல மைல் தூரம் புத்தகச் சுமையைச் சுமக்கும் நிலைமை அங்கு கிடையாது. அங்கு தொடக்கக் கல்வி குறித்து ஆலோசனை வழங்க நிரந்தரமான சட்டப்பூர்வ அமைப்புகள் உள்ளன. அதன் செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது.
ஆனால், இங்கு தனியார் பள்ளிகள் மதிப்பெண் பொரித்து எடுக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. நாமக்கல் பகுதியில் இப்பள்ளிகள் அதிகமாக இருப்பதால் கோழிப்பண்ணைகள் போல பள்ளிகளை நடத்தி வருகின்றன. இதுபோன்ற பள்ளியை ராசிபுரத்தில் முதலில் தொடங்கியவர்களின் ஒரு பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் தனது கிளையைச் சில ஆண்டுகள் முன்னால் தொடங்கியது.
அது குறித்து அதன் நிர்வாகியிடம் பேசியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. முதலில் அவர் கல்வியியல் சார்ந்தவர் அல்ல; அவர் ஒரு விலங்குகள் மருத்துவர் என்பது. இரண்டாவது முதலில் தனது குடும்பத்துக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளை நிர்வகித்து வந்தவர்; இப்போது பள்ளியை நிர்வகிக்கிறார். அடுத்தது, தமது தொழிலை விரிவுபடுத்துவதற்காக, அதாவது பெரிய அளவில் கோழிப் பண்ணைகள் வைப்பதற்காக வளைத்துப் போட்ட 50 ஏக்கர் நிலத்தில்தான் இப்போதைய பள்ளி பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. தமது பள்ளிக்கு மேலும் ஒரு கிளை தேவைப்பட்டது; அது நெடுஞ்சாலை அருகில் இருந்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெற்றோர் வந்து போக வசதியாக இருக்கும் என்பதால் கோழிப்பண்ணைத் திட்டத்தைக் கை விட்டுப் பள்ளியை உருவாக்கினார்கள். அது வீண் போகவில்லை. இப்போது சில ஆண்டுகளிலேயே அப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மூவாயிரம் ஆனது. நான் கேலிக்காக இதைச் சொல்லவில்லை. யாரும் விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
கோழிகள் அதிக முட்டைகள் பொரிக்கச் செய்வதைப் போல மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பொரிக்கச் செய்ய வேண்டும் என்பதால் அம் மருத்துவருக்குப் பள்ளியை நிர்வகிப்பது சுலபமாக இருக்கலாம்.

இதுபோல தமிழகத்தில் பிரபலமாக உள்ள பள்ளிகள் பெரும்பாலும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக இருக்கின்றன. 90 மாணவ& மாணவிகள் தங்கிப் படிக்கிறார்கள். அதாவது அவர்களது காலை நேரம் 6 மணிக்குத் தொடங்குகிறது. நள்ளிரவு வரை அவர்கள் படிப்பு தொடர்கிறது. பள்ளி தொடங்குவதற்கு முன்னும், பின்னும் விடுதிக்கே ஆசிரியர்கள் வந்து தேர்வு நடத்துகிறார்கள். அதன் பிறகு மாணவர்கள் தாமாகப் படிக்க வேண்டும். தமது அறையில் பாடம் படித்தால் கதவைத் திறந்து வைத்துக் கொண்டுதான் படிக்க வேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு முன் கதவை மூடிவிட்டுத் தூங்கினால், விடுதி ஆசிரியர்கள் கதவைத் தட்டி எழுப்பி விடுவர்.
எந்த ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்கள் குறித்து அதிகப் புகார்களை அளிக்கிறாரோ அவரே அப் பள்ளியின் சிறந்த ஆசிரியராவார். இது போன்ற மற்றொரு பிரபல பள்ளியின் முதல்வரின் அறையில் உட்கார்ந்திருந்த ஒன்றரை மணி நேரத்தில் இது போன்ற 18 புகார்கள். அதில் ஒன்று விநோதமானது. அதாவது அப் பள்ளியின் நுழைவாயிலில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்த பின்னரே உள்ளே நுழைய முடியும். அதிலும் சிறுவர், சிறுமி என தனித் தனி வரிசைகள். அவ்வாறு ஆண்கள் வரிசையில் சென்ற மாணவன் மாணவிகள் வரிசையை மீண்டும், மீண்டும் திரும்பிப் பார்த்தபடி நடந்தான் என்பது ஆசிரியையின் குற்றச்சாட்டு. எவ்வளவு பெரிய ஒழுக்கக்கேடு! அந்த மாணவனிடம் விசாரிக்காமலேயே பெற்றோருக்கு அலைபேசிய முதல்வர் அவரது மகன் பள்ளியில் ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகவும், இதை மேலும் அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.
இது போல தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படும் பல நடவடிக்கைகள் சிறைச்சாலைகளை நினைவு படுத்துவதாக உள்ளன. தமிழ்நாட்டில் பல ஊர்களில் பள்ளிகளையும் கல்லூரிக¬ளையும் திறந்து வரும் நிறுவனப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் விசில் அடித்ததும் அக் குழந்தைகள் சரசரவென ஓடிச் சென்று உள் அரங்கின் சுவர்களில் முகத்தைக் காட்டி, கைகளை உயர்த்தியபடி நிற்க வேண்டும். அடுத்த விசில் சத்தம் கேட்ட உடன்தான் திரும்ப வேண்டும்.
இத்தகைய பள்ளிகள்தான் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. அரசு என்னதான் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் இவர்களிடம் நடப்பதில்லை. பணம் பிடுங்க எத்தனையோ வழிகளைக் கண்டுபிடிக்கின்றன. மேலும், இப்போதெல்லாம் கல்விச் சுற்றுலா, கலைச் சுற்றுலா, பொதுப் பணிகள் திட்டம், தலைமைப் பண்புப் பயிற்சிகள், நுண் கலை & வரை கலை& வடிவமைப்புப் பயிற்சிகள், நுழைவுத் தேர்வுப் பயிற்சிகள், ஆட்சிப் பணித் தேர்வுகளுக்கு இப்போதே தயாரிப்புகள் என நவீனக் கொள்ளையிலும் ஈடு படுகின்றன.
ஆனால், உண்மை நிலவரம் இவர்களுக்கு எதிராக இருப்பதைப் பற்றி இவர்கள் கவலை கொள்வதில்லை. அண்மையில் வெளியான ஆட்சிப் பணித் தேர்வு முடிவுகள் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு சதவீதம் பேர் கூட இது போன்ற பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல என்பதையே காட்டுகின்றன.
இவ்வளவை மீறி இவர்களுக்குப் பெரிய நெருடலாக இருப்பது பொதுப் பாடத் திட்டம். பெரும்பாலான பள்ளிகள் தற்போதைக்கு இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் பொதுப் பாடத்திட்டமே நடைமுறைக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் இத் தனியார் நிறுவனங்கள் இப்போதே சி.பி.எஸ்.சி பள்ளிகளையும் தொடங்கி வருகின்றன.
ஆனால் மாநிலப் பள்ளி முறையானாலும், மெட்ரிக்குலேஷன் முறையானாலும். சிபிஎஸ்சி அல்லது ஆங்கிலோ & இந்தியன் முறையானாலும் பாடங்கள் ஒன்றுதான். ஆசிரியக் கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசியக் குழு (என்.சி.ஈ.ஆர்.டி) தேசியக் கல்வித் திட்டம் & 2005இல் கூறியுள்ளபடி ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்களை விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளது. எந்தக் கல்வி முறையானாலும் இதைத்தான் தமது பாடத் திட்டங்களில் வைத்துள்ளன. ஆனால், தமிழக அரசு மட்டும்தான் இதன் அடிப்படையில் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்தை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், துறை வல்லுனர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதியுள்ளது. இப் பாடங்கள் பல வரைவுகளாக இணையத்தில் வெளியிடப்பட்டு மக்கள் எதிர்வினைகளைப் பெற்று மீண்டும் திருத்தப்பட்டு அதன் வரைவு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி மாதிரி வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் பின்னூட்டங்களைப் பெற்று இறுதி வடிவம் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதோடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது தரமான பாடம் இல்லை என்றால் வேறு எது தரமான பாடம் என்று சொல்லுங்கள். அல்லது எந்தப் பள்ளிகள் அல்லது புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இதுபோன்ற துறைசார் வல்லுநர்களையும் கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட குழுக்களை நியமித்துப் பாடங்கள் எழுதியுள்ளன என்பதையாவது காட்டுங்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார் பிரின்ஸ்.
நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் நமது ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளை உணரச் செய்வதும் அதைப் பின்பற்ற வேண்டிய கடமைப்பாட்டை உணர்த்தச் செய்வதும்தான் அடிப்படைக் கல்வியின் நோக்கம். அதனால்தான் பாரதி ‘‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், ஐயோ! என்று போவான்’’ என்று பாடினான்.
இதை ஏற்கும் பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுபோன்ற பள்ளிகள் அடிப்படைக் கல்வியின் அடித்தளத்துக்கே வேட்டு வைக்கின்றன என்கிறார். ‘‘1 முதல் 10 வரை படித்து வெளி வரும் மாணவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் விழுமியங்களைத் தெரிந்து கொண்டு வெளிவரவேண்டும் என அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனவா? இந்த நோக்கம் குறித்து, இப்படி அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்து எத்தனை பள்ளிகளின் தாளாளர்கள், தலைவர்களுக்குத் தெரியும்?’’ என்றும் கேட்கிறார்.
தனியார் பள்ளிகள் தாம் இக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அளிக்குமா?
- நன்றி
த சண்டே இந்தியன் ஜீன் 2013 இதழ்-- 

 -