சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

சனி, 29 நவம்பர், 2014

தமிழ் சாப்ளின் கலைவாணர் 3

நாட்டுக்கொரு நல்ல கோமாளி!


அந்தக் காலத்தில் கூட எல்லாப் படங்களுக்கும் அழைத்துச் செல்லமாட்டார்கள். பண்பாட்டுக்கு ஒவ்வாத கதைகள், காட்சிகள் இருந்தால் அது சென்சார் செய்யப்பட்டுவிடும். பொதுவாக கிளப் டான்ஸ் உள்ள படங்கள், இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்கள், ஆபாச அங்க அசைவுகள் உள்ள படங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. அந்த மாதிரிப் படங்களின் வால்போஸ்டர்களைப் பார்ப்பதுகூட குற்றம். அப்படியே தெரியாமல் போய்விட்டாலும் ஸ்பாட் சென்சார் அவ்வப்போது அமலுக்கு வரும். அதுபோன்ற காட்சிகள் வரும்போது அந்தக் காட்சி முடியும் வரை கண்ணைப் பொத்திக் கொள்ளச் சொல்வார்கள். ‘திற’ என உத்தரவு வந்தால்தான் கண்ணைத் திறக்க வேண்டும். ‘மாயமோதிரம்’ என்ற படம் பார்க்கும்போது அவ்வாறு பலமுறை கண்ணை மூடிக்கொள்ள நேர்ந்தது நினைவில் இருக்கிறது. இதுமாதிரி நகைச்சுவைக்காட்சிகளுக்கும் கண்ணை மட்டுமல்ல காதுகளையும் பொத்திக் கொள்ளச் சொல்வார்கள். அந்தக் காலத்திலும்கூட, அந்தக் காலத்துக்கு ஏற்ப வசனங்கள் விரசமாக இருப்பதுண்டு. அதில் விதிவிலக்கு கலைவாணர்- மதுரம் நடித்த காட்சிகள்.

இரட்டை அர்த்த வசனங்கள், நகைச்சுவை என்ற பெயரில் விரசமான காட்சிகள், அங்கஹீனங்களைக் கேலி செய்வது போன்றவை பாய்ஸ் கம்பெனிகள் காலத்திலும் இருந்தது. ஸ்பெஷல் நாடகங்களில் பஃபூன் காமடி இதற்காகவே பிரபலம். பேசும்படங்கள் வந்தபோது அதிலும் அப்படியே தொற்றிக்கொண்டது. தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் நகைச்சுவைக் காட்சிகள் எப்படி இருந்தன? இந்தக் கேள்விக்கு வெ. சாமிநாதசர்மா எழுதியுள்ள ‘நமது பிற்போக்கு’ என்ற புத்தகத்தில் விடையைக் காணலாம்.

“இன்றைய காட்சிகளில் சம்பாஷனைகளும், பாட்டுகளும் எவ்வளவு தாழ்வான நிலையை அடைந்திருக்கின்றன என்பதைப் பற்றி விஸ்தரித்துக் கூற நமது எழுதுகோல் கூசுகிறது. சம்பாஷணைகளிலும், பாட்டுகளிலும்தான் ஒரு கம்பீரம் இல்லையென்று சொன்னால் பெயர் கொடுப்பதில்கூட ஒரு கம்பீரம் இருக்கக்கூடாதா? படங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; பெயர்களில் ஒரு கவுரவம் இருக்க வேண்டாமா? ‘அம்மாஞ்சி’, ‘மிளகாய்ப்பொடிபார்ஸ்’, ‘செல்லாக்காசு’! அடக் கடவுளே! இவையெல்லாம் என்ன பெயர்கள்? நாம்தான், உலக அரசியல் நாணயச் செலாவணி மார்க்கெட்டிலே செல்லாக்காசுகளாக இருக்கிறோமே! இந்த அவமானம் போதாதா? சினிமாக்களில்கூட நாம் செல்லாக்காசுகளாக முத்திரையிட்டுக் கொள்ள வேண்டுமா? கிழட்டுப் பிராமணன் ஒருவன் தனது இரண்டாம் தாரத்துக்குத் தலைவாரி முடிப்பது; அல்லது அவன் மனைவி அவனுக்கு அன்னம் படைப்பது; அல்லது குறத்தி குறி சொல்லுவது; அல்லது வண்ணான் வண்ணாத்தி காட்சி; இவையெல்லாம் ஹாஸ்ய ரசம்”

அப்போதெல்லாம் சினிமா விமர்சனமும் எவ்வளவு முதிர்ச்சியாக இருந்தது என்பதற்கும் இது சாட்சியாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றியதில் கலைவாணருக்கு முக்கியப் பங்கு உண்டு. உண்மையில் இதில் அவர்தான் டிரெண்ட் செட்டர். தனக்கென தனியான அடையாளத்தை வகுத்துக் கொள்கிற வரை அவரும் தொடக்க கால தமிழ் சினிமா குறித்து வெ.சாமிநாத சர்மா விவரித்துள்ள மாதிரியான நகைச்சுவைக் காட்சிகளில் தான் நடித்துவந்தார். அதற்கு ‘சந்திரகாந்தா’ ஒரு உதாரணம். இதில் கலைவாணர் நடித்த கேரக்டர் பெயர் ‘முனியன்’. அவருக்கு ஜோடியாக பி.சுசீலா (பின்னணிப் பாடகி அல்ல) நடித்தார். அவரது கேரக்டர் பெயர் ‘அம்பட்ட சுப்பி’.

முதல் படங்களில் நடித்தபோதே சினிமா கலையை நன்றாகப் புரிந்துகொண்டார். சினிமாவின் நகைச்சுவைக் காட்சிகள் ஒரு இணை திரைக்கதை என்பதை உணர்ந்துகொண்டார். உதாரணமாக, ’முதல்தேதி’ படத்தில் ஒண்ணாம் தேதி சம்பளத்தை நம்பிவாழும் வங்கிக் குமாஸ்தாவாக சிவாஜி கணேசனும் அவர் கொண்டுவரும் குறைந்த சம்பளத்தில் சிக்கணமாகக் குடும்பம் நடத்தும் மனைவியாக அஞ்சலிதேவியும் நடித்துள்ளனர். இந்த பிரதான கதைக்கு கலைவாணரும் மதுரமும் ஒரு இணை கதையைக் கூறுவார்கள். லட்சாதிபதியின் மாப்பிள்ளையான கலைவாணர் சும்மா பெறுமைக்காக வேலைக்குப் போகிறவராகவும், அவரது ஊதாரி மனைவியாக மதுரமும் நடித்திருப்பார்கள்.

இதுகலைவாணர் - மதுரம் தொடங்கிவைத்த டிரண்ட் தான்! 1939இல் வெளிவந்த ‘திருநீலகண்ட’ரில் எம்.கே.டி பாகவதரும் சரஸ்வதியும் சொல்லும் கதைக்கு இணையான கதையை கலைவானர் உருவாக்கி தானும் மதுரமும் நடித்திருந்தனர். இப்படத்திலிருந்து காமெடிக்கு தனி டிராக் எழுதும் பழக்கம் தொடங்கியது.

கலைவாணர் ஒரு பிலிம் மெக்காணிக்கும் கூட. இப்போது ஒரு படத்தைத் தயாரித்து, ரிலீஸ் செய்து படு தோல்வி அடைந்தாலும்கூட, கலைவாணரிடம் கொண்டுவந்தால் போதும். அதை எப்படிச் சரி செய்யவேண்டுமோ அப்படிச் சரிசெய்து விடுவார். உதாரணமாக, 1947 இல் வெளியான ‘பிரம்மரிசி விஸ்வாமித்ரா’ சரியாக ஓடவில்லை. பின் கலைவாணரிடம் வந்தார்கள். சகடன், யோகன் என இரு பாத்திரங்களை உருவாக்கி (சகட யோகம்!) தானும் மதுரமும் நடித்துக்கொடுத்தார்கள். படம் மீண்டும் 1948 தொடக்கத்தில் மீண்டும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதேபோல ‘சோகமேளர்’, ‘குடும்ப விளக்கு’ போன்ற படங்களும் என். எஸ். கே மெக்காணிக் பட்டறையில் ரிப்ப்ர் செய்யப்பட்டபின்னரே வெற்றியடைந்தது.

மற்ற படங்களிலும் நகைச்சுவைக்காட்சிக்கான கதை வசனம் மட்டுமல்லாமல் காட்சிகளையும் அவர்தான் இயக்குவாராம். படத்துக்கான ஒப்பந்தமே அவ்வாறுதான் போடப்பட்டது எனக் கூறுவதுண்டு. எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.

1941 இல் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் அலிபாபாவாக கலைவாணரும் மார்ஜீயானாக மதுரமும் நடித்திருந்தனர். ஆங்கிலப்படத்துக்கு நிகராகத் தயாரிக்கப்பட்டதாக அந்தக்காலத்தில் இப்படம் பெயர் பெற்றது.

1938 இல் வெளியான ‘தட்சயக்ஞம்’ புராணப் படத்தில் ரதி - மன்மதனாக மதுரமும் கலைவாணரும் நடித்தனர். இதில் ரதி - மன்மதன் குறித்து காலம் காலமாகக் கூறப்பட்ட புராணிகத்தை உடைத்து நொறுக்குகிறார்கள். மன்மதன் அழகனல்ல - பறட்டைத்தலையன். ரதியை ஒரு கிழவனுக்கு மணமுடித்துக்கொடுக்கிறார்கள். கிழவனால் சுகம் பெற முடியாத ரதி இளைஞனான பறட்டைத் தலையன் மன்மதனை நாடுகிறாள்.

அதேபோல .... படத்தில் ஒரு பாட்டு. அதில் நாக்கில் கலைவாணி குடியிருக்கிறாள் என்றால், மல-ஜலம் கழிப்பது எவ்வாறு? எனக் கேள்வி கேட்பார்கள்?

மாணிக்கவாசகர் படத்தில் ‘இது தர்ப்பைப் புல் இல்லங்கானும்! எழுதுகோல்! தொலைச்சுப் புடுவேன், தொலைச்சு, ஜாக்கிரதை’ என புரோகிதரிடம் கூறுகிறார்.

1940 இல் கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் தயாரித்த படம் ‘நவீன விக்ரமாதித்தன்’ பட்டி - விக்கிரமாதித்தன் கதையை கலைவாணர் நவீனப்படுத்தியிருப்பார். கதை எழுதியதோடு நவீன விக்கிரமாதித்தனாக நடித்தார். இந்தப் படத்துக்குள்ளேயே இன்னொரு படம்; இன்னொரு கதை. அது ‘ புத்திமான் பயில்வான்’ இதன் கதியும் கலைவாணர்.

’புத்திமான் பலவான்’ என்ற கொள்கையுடன் வாழும் சோம்பேறி சின்னான் - அவன் ஏழை  மனைவி செல்லியாக என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்.

இப்படத்தில் இப்படத்தில் எம். ஆர். சுவாமிநாதனிடம் அடி வாங்கிக்கொண்டு கலைவாணர் வருவார். ஆனால் மதுரத்திடம் தாந்தான் அவடை அடிச்சது போலப் பேசுவார்.

“அப்படி வேற நினைச்சியா? எனக்குப் பொல்லாத கோபம் வந்திருச்சி. அவ்வளவுதான் நான் கைய அப்படி மடக்கி அவன் கன்னத்துக்கு நேரா குறிபாத்து இப்படிக் கொண்டு பேனேன். அதற்குள் (தன் மூக்கைக் காண்பித்து) இங்க குடுத்தான். அதோட சுதாரிச்சுக்கிட்டேன். (மாடு போல தலையக் குணிந்து) அப்படியே வயத்துல குத்தீரலாமுனு நினைச்சு குனிஞ்சேன். (முதுகைக் காண்பித்து) இங்க குத்தினான். என்னடா?ன்னு நிமுந்தேன். அவ்வளவுதான் (வயித்தக் காண்பித்து) இங்க குத்தினான். சீ இவ்வளவுதானா நீ என கத்திய விரிச்சுக் குத்தப் போனேன். இங்க குடுத்தான். சரி இனிவிட்டா ஆபத்துன்னு எழுந்திருச்சேன். ஒரே ஓட்டம்.

தன்னால் ஒரு அடிகூடத் திரும்பக்கொடுக்க முடியாவிட்டாலும் தன் மனைவியிடம் ஜம்பமாக, முகத்தை ஏதோ பயில்வான் மாதிரி வைத்துக்கொண்டு, கைகளை முறுக்கி மனைவி செல்லியிடம் பிரஸ்தாபிக்கும்போது அவர் கண்கள் மட்டும் அவரது அப்பாவித்தனததைக் காட்டிக்கொடுக்கும்.

இதேபோல, பி யூ சின்னப்பா நடித்த உத்தம புத்திரன் படத்தில் என் எஸ் கே வைணவப் பிராமணர் வேடத்தில் நடிப்பார். ஆத்தங்கரையில் குளித்து முடித்து திருமண் (உடம்பில் நாமம்) இட்டுக்கொண்டிருக்கும்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த புல்லுக்கட்டுக்காரி வருவாள். அவளிடம் வம்பிழுத்துக்கொண்டே தமது இச்சையை வெளிப்படுத்துவார். அதற்குள் அவ்வப்போது ஆள்கள் ஆத்துக்கு வந்துகொண்டிருப்பார்கள், உடனே திருமந்திரம் பாடுவதுபோல பாசங்கு செய்வார். ஒருவழியாக அப் பெண்ணை சாயந்தரம் ‘குளித்து சுத்தமாக; வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வரச் சொல்லுவார். அதற்குள் மனைவியிடம் வேண்டுமென்றே சண்டை இழுத்து பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவாள். ஒரே மகனிடமும் காசு கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார். அழுதுகொண்டே அப்பா வீட்டுக்குச் செல்லும் மாமியிடம் புல்லுக்கட்டுக்காரி விஷயத்தைச் சொல்லி அழுவாள். புருசனின் திட்டத்தைப் புரிந்துகொண்டே மனைவி, தானே புல்லுக்கட்டுக்காரிபோல போவாள். புல்லுக்கட்டுக்காரி என நினைத்து அசடு வழியும் என் எஸ் கே மனைவியிடம் வசமாக மாட்டிக்கொள்வார்.


இங்கு கூறப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலான படங்கள் 1944க்கு முந்தவை. 1944 இல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டுசிறைக்குச் செல்கிறார். அவருடன் பாகவதர், ராமுலு ஆகியோரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 1947 இல் சிறைமீண்டு மீண்டும் திரைவானில் கலக்குகிறார். அப்படங்கள் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.

நகைச்சுவைக்கு அடையாளமாக ஆச்சரியக் குறி இடுவது. கலைவாணர் பேசினால் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஆச்சரியக் குறிதான்! அது அவருக்குத்தான் பொருந்தும்!

நகைச்சுவை என்பது கலைவாணரின் மொழி; வாழ்க்கை; சுவாசம்!

லட்சுகிகாந்தன் கொலைவழக்கில் இரண்டறை ஆண்டுகள் கழித்து பாகவதரும் கலைவாணரும் விடுதலை யாகிறார்கள். பாகவதர்  நேராக தமக்கு விருப்பமாக முருகன் கோயில் செல்கிறார். அதன்பிறகு அவருக்கு யாரையும் பார்க்க விரும்பவில்லை. தனிமையில் இருக்கிறார். ஆனால், கலைவாணர் உடனடியாக மக்களிடம் சென்றார்’ தனது சிறை அனுபவங்களை மக்களிடம் பேசினார். சிறையில் என்னென்ன மாதிரியான கைதிகளைப் பார்த்தார். கைதிகளின் நிலைமை, அவர்களது வாழ்க்கை ஆகியவற்றை நகைச்சுவையாகக்கூறினார். மக்கள் சிரித்தனர்; கைதட்டி ரசித்தார்கள். இதோ தொடர்ந்து பேசுகிறார்:

”இப்போ நீங்க சிரிச்சீங்களே அது போதாது, நல்லா குலுங்கக் குலுங்கச் சிரிக்கணும்! ஆனா நீங்க இங்க சிரிச்சது எப்படி இருந்தது தெரியுமா? லெனின் கிராடுல ஹிட்லர் சிரிச்ச மாதிரி இருந்துச்சு! நான் வேண்டுறது அந்தச் சிரிப்பே இல்ல, அது மரணச் சிரிப்பு!...  ஒரு நாட்டுக்கு உணவு, உடை எல்லாம் அப்புறம்தான்...  முதல்ல சிரிப்பு வேணும்!.. .. ஒரு மருத்துவர் சொல்லியிருக்காரு.. நல்லா சிரிச்சுட்டா நோய் வராதாம்! சிரிப்பு ஒரு மருந்து!..  அதனால நீங்க சிரிக்கச் சிரிக்க எனக்கு ஆனந்தம்! நான் வந்தேனோ இல்லையோ நீங்க சிரிச்சிட்டீங்க! அது எனக்குப் பெருமை!.. சிரிக்க வைப்பது ஒரு தொண்டு! அப்படீன்னா நான் தேசத்துக்கு ஒரு தொண்டு செய்த மாதிரி! மாதிரி என்ன மாதிரி? தொண்டுதான் செய்யறேன்! ..

“மனிதன் எதிலே சிறந்தவன்? புலி - மனிதனைவிட ரொம்ப அழகா இருக்கு! குரங்கு - நம்மைவிட நல்லா நடக்குது! குருவி - நம்மை விட நல்லா கூடு கட்டுது! மனிதன் உயர்ந்தவன் என்றால் அழகால் அல்ல.. நடையால் அல்ல.. திறமையால் அல்ல.. சிரிப்பால்! ... மற்ற பிராணிகளுக்கு சந்தோஷம் மட்டும் உண்டு! ஆனால் சிரிக்கத் தெரியாது!

“நாய்கூட ஆனந்தத்திலே வால் ஆட்டுது, ஆனா சிரிக்காது! மனிதன் ஒருத்தனுக்குத்தான் சிரிக்கத் தெரியும். அது எங்கே இருந்து வருது? நல்ல மனசுல இருந்து! .. அதனால நீங்க சிரிச்சா எனக்கு சந்தோஷம்! என்னைப் பார்க்கிறபோது மட்டுமல்ல, என்னை நினைக்கிற போதும்கூட சிரிங்க! சிரிங்கோ!” 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக